search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகைப்பட கலைஞர்"

    சமயபுரம் அருகே பெண்களிடம் சங்கிலி பறித்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
    சமயபுரம்:

    திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் லால்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலவாளாடி, வாளாடி, புறத்தாக்குடி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தனியாக நடந்து சென்ற பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக 2 போலீஸ் நிலையங்களிலும் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நபரை பிடிக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்படி லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நேற்று திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூர் பிரிவு ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் திருச்சி அண்ணாசாலை கைலாஷ்நகர் 3-வது கிராசை சேர்ந்த சுப்பையா மகன் சுரேஷ்குமார்(வயது 34) என்பதும், புகைப்பட கலைஞரான அவர் சொந்தமாக கேமரா வைத்து திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்து கொடுக்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. அந்த தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில், ஆடம்பரமாக வாழ நினைத்த அவர் குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில நாட்களாக தனியாக சென்ற பெண்களிடம் தங்க சங்கிலிகளை பறித்து சென்றதும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க நம்பர் பிளேட் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதும், விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 30 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் அவரை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட புகைப்பட கலைஞரை கைது செய்த இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான தனிப்படை போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். 
    கொடைக்கானலில் 700 அடி பள்ளத்தில் விழுந்த புகைப்பட கலைஞர் உயிருடன் மீட்கப்பட்டார்.
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணி (வயது 24). இவர் டால்பின் நோஸ் என்ற சுற்றுலா பகுதியின் அருகே உள்ள எதிரொலிக்கும் பாறையில் சுற்றுலா பயணிகளை புகைப்படம் எடுக்கும் வேலை செய்து வருகிறார்.

    அவர் நேற்று பகலில் ஒரு சுற்றுலா பயணிக்கு புகைப்படம் எடுக்கும்போது பாறையில் இருந்து சுமார் 700 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இச்சம்பவத்தால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அச்சத்தால் உறைந்தனர்.

    இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சுமார் 700 அடி பள்ளத்தில் இறங்கி தேடி மணியை மீட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கயிறு கட்டி மணியை மேலே கொண்டு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இச்சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×